Wednesday, July 22, 2009

யுரேனியம்-கருவிகள்: அமெரிக்காவிடம் சரணடைந்த இந்தியா?

டெல்லி: இந்திய அணு உலைகளுக்குத் தரப்படும் எரிபொருள், அதை செரிவூட்ட பயன்படும் கருவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவுக்கு அதிகாரம் வழங்கும் ஒப்பந்தத்தில் (End-Use Monitoring Agreement-EUMA) இந்தியா ரகசியமாக கையெழுத்திட்டுள்ளது.

அதாவது இந்திய அணு உலைகளுக்குத் தரப்படு்ம் யுரேனியத்தை நாம் மீண்டும் செரிவூட்டி அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்துகிறோமா என்பது அமெரிக்க அதிகாரிகள் வந்து சோதனையிட முடியும்.

இன்னும் தெளிவாகச் சொன்னால் அமெரிக்கா தந்த கருவிகளும் எரிபொருளும் அணு உலைகள் தவிர வேறு எதற்கும் (அணு ஆயுதம் தயாரிக்க) பயன்படுத்தப்பட்டுவிடாமல் இந்த ஒப்பந்தம் தடுக்கும்.

சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும் நமது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இதில் கையெழுத்துப் போட்டுவிட்டு அதைப் பற்றி ஹிலாரி டெல்லியை விட்டுக் கிளம்பும் வரை மறைத்துவிட்டது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்தச் செயலுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு செய்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஒப்பந்த்தின் மூலம் இந்தியாவி்ன் பாதுகாப்பையே மத்திய அரசு அடமானம் வைத்துவிட்டதாக பாஜக தலைவர் அத்வானியும் இடதுசாரிக் கட்சி எம்பி்க்களும் மத்திய அரசை சாடினர்.

இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல நமது அணு உலைகளுக்கு எரிபொருள், கருவிகள் சப்ளை செய்யும் அனைத்து நாடுகளும் நமது அணு ஆயுதங்களை பார்வையிட மத்திய அரசு வகை செய்துவிட்டது, அமெரிக்காவி்ன் நிர்பந்தத்துக்கு பணிந்துவிட்டது என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறுத்தார். EUMA ஒப்பந்தம் மூலம் யாரும் நம்மை வந்து கண்காணிக்க முடியாது என்றும், அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒரு இடைக்கால ஏற்பாடு தான் இந்த ஒப்பந்தம் என்றும் கூறினார் கிருஷ்ணா.

இந்த ஒப்பந்தத்தை அப்படியே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, அமெரிக்காவுக்கு அடிபணிவது இந்த அரசி்ன் வழக்கமாவிட்டது என்றார்.

ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையி்ல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தை அரசு மறைக்க முயற்சிக்கிறது. அமெரிக்காவுடன் கைகோர்க்கும் முன் இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் உத்தரவுக்கு இணங்க மறுத்தால், சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான் மற்றவர்களுக்கும் ஏற்படும் என்றார்.

எதிர்க்கட்சிகளுக்கு திமுக ஆதரவு..

மக்களவையில் இந்தப் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்து பேசியபோது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது.

அதே போல மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சியினருக்கு திமுக ஆதரவாகப் பேசியதால் காங்கிரசார் எரிச்சாயினர்.

கேபினட் கூட்டம் ஒத்திவைப்பு...

இந் நிலையில் நேற்று நடக்கவிருந்த மத்திய கேபினட் கூட்டம் காரணம் ஏதும் தெரிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. கூட்டணிக் கட்சிகளே கோபத்தில் இருப்பதால் இக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது

அமெரிக்கா மகிழ்ச்சி..

இதற்கிடையே இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கித் தந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்த தனது முதல் அறிக்கையை அதிபர் ஒபாமா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் பெஞ்சமின் கூறுகையில்,

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் உறவு மேலும் பலப்படுவதற்கான புதிய வழிமுறைகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. எரிபொருள் சப்ளை, அணு ஆயுத பரவல் தடுப்பு உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

Tuesday, July 21, 2009

இனி செல்வராஜா பத்மநாதனே வழி நடத்துவார்-விடுதலைப் புலிகள்

வன்னி: பிரபாகரனால், விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட செல்வராஜா பத்மநாதன் இனி வரும் காலத்தில், ஏற்ப புலிகள் அமைப்பின் போராட்டத்தை வழி நடத்திச் செல்வார் என விடுதலைப் புலிகள் அமைப்பு கூறியுள்ளது.

இதன் மூலம் புலிகள் அமைப்பின் புதிய தலைவராக செல்வராஜா பத்மநாதன் அதிகாரப்பூர்வமாக உருவெடுத்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குகுழு என்ற பெயரில் சுரேஸ் (அமுதன்), ராம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை..

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே, எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர் படிந்த கால கட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலை குலைந்து நிற்கின்றது.

ஈடு செய்ய முடியாத- கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத- மிகப் பெரிய இழப்புக்களை, எம்மினம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், இலங்கை நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில்- தமிழீழ விடுதலைக்காக வீறுகொண்டு எழுந்து போராட வேண்டிய வரலாற்றுக் கடமை- எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணிற்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்து விட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில்- வரலாற்றின் தேவை கருதி, பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப, புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மீள்-ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.

போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும், பாதைகளும் காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி லட்சியமான தமிழீழம் என்றும் மாறாதது. எனவே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாங்கள் மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.

அன்றும் இன்றும் இனி என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ் தேசியத்தின் தலைவர். எங்கள் முன்னாலுள்ள தடைகளை உடைத்தெறிந்து எங்கள் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எங்கள் உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட, நீண்ட, விரிவான, ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டு முடிவுக்கு ஏற்ப பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த செல்வராஜா பத்மநாதன் இனிவரும் காலத்தில் எங்கள் போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார் என்பதை மக்களுக்கும், உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கிறோம்.

போராட்டத்தை முனைப்புடன் முன்னகர்த்தும் நோக்கில் இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை பற்றிய விபரங்களை விரைவில் தெரிவிப்போம். எங்கள் எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துக்களையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமித்ததாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் தோற்று விட்டதென்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.

பிரபாகரன் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுளள் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தியுள்ளது என்ற உண்மையையும் எங்கள் அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் மூலமாக உலகிற்கு உணர வைப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, July 2, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே உலாவரும் மில்லியன் டாலர் கேள்வி. பத்து நாட்களுக்கு முன் நார்வே நாட்டில் உள்ள தமிழர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர். காரணம், நார்வே நாட்டில் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வெளியானது தான். புலித் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்த சிலரிடம் கேட்டபோது,


“இந்தோனேசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தீவுகளில் மக்கள் அதிகமாகப் புழங்கும் பெரும் தீவுகள் 26 மட்டும்-தான். சில குட்டி, குட்டித் தீவுகளில் தீவிரவாத அமைப்புகள்

காலூன்றி உள்ளன. அவர்களிடம் நல்ல நட்புறவில் இருந்த பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் அந்தத் தீவுகளில் ஒன்றில் பத்திரமாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.
ஈழ ஆதரவாளர்கள் இதைவிட இன்னும் சற்று சந்தோஷிக்கும் விதமாக ஒரு செய்தி உலா வருகிறது, “இலங்கையிலிருந்து மிக எளிதில் தப்பிக்க வாய்ப்பு உள்ள ஒரே இடம் தமிழ்நாடுதான். எனவே, அதிராம்பட்டினம் கடற்கரை வழியாக வந்த பிரபாகரன், தற்போது திருச்சி மையப்பகுதியில் ரகசியமான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்” என்ற செய்தியும் சமீப சில நாட்களாக உலா வரத் தொடங்கியிருக்கிறது.

“இல்லை, இல்லை மாசற்ற மாவீரன் பிரபாகரன் கோழையைப்போல் தப்பித்துச் செல்ல வாய்ப்பே இல்லை. லட்சக்கணக்கான தமிழ் ரத்த சொந்தங்களையும் ஆயிரக்-கணக்கான போராளிகளையும், மட்டுமல்ல தனது வீரமைந்தன் சார்லஸ் அந்தோணியையும் சிங்கள கொலைவெறிக்குப் பலி கொடுத்த பின்பு, தாய் மண்ணைவிட்டு வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை. இன்னமும் வன்னிகாட்டில் மக்களுடன் மக்களாக, மீண்டும் அவர்களை பாதுகாக்கும் உத்திகளுடன் பலத்த பாதுகாப்பு அரணுக்குள்தான் பிரபாகரன் இருக்கிறார்” என்றும் பேசுகிறார்கள்.

இச்சூழ்நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு விடைதேடி புறப்பட்டோம். விடுதலைப்-புலிகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் எப்போதுமே மிக நெருக்கமான தொடர்-புள்ள இடம் வேதா-ரண்யத்தை அடுத்த கோடியக்கரைதான்! பிரபாகரனும், மற்ற ஈழ விடுதலை அமைப்புகளும், ஆயுதப்பயிற்சி எடுத்துக் கொண்டதும் இங்குதான். மேலும் விடுதலைப்-புலிகளின் அதி நவீன விசைப்படகு இலங்கை-யிலிருந்து கோடியக்-கரைக்கு வந்து சேர வெறும் பன்னிரென்டு நிமிடங்கள்தான் ஆகும் என்பது ஆச்சர்ய-மான விஷயம். இத்தகைய அதிவேகப்-படகு இந்தியா, இலங்கை ராணுவத்திடம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் கள்ளக் கடத்தல் தொழிலாக இருந்து பிறகு, புலிகளுக்குத் தேவையான பொருள்களை சப்ளை செய்யும் தொழிலாக மாறி, அதனை செய்தவர்கள் வசிக்கும் பகுதியும், கோடியக்கரைதான். அத்தகைய தொழிலில் இருந்தவரும், இன்று-வரை புலிகளின் அசைவை அறிந்தவருமான முக்கியப் புள்ளி ஒருவரைச் சந்தித்தோம். அவரிடம் நாம் பேசியபோது, ‘நான் அறிந்த வரையில் தம்பி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவரைத் தெரிந்தோ, தெரியாமலோ இலங்கை அரசு இறந்ததாக அறிவித்து ஓர் உடலையும் காட்டி நாடகத்தை முடித்துவிட்டது.

ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜியைப்போல, இலங்கையின் இனவெறியை எதிர்த்து தமிழ் மக்களின் விடுதலைக்குப் போராடிய உண்மையான போராளியை சர்வதேச அளவில் கோழை மரணமாகச் சித்திரித்து அவமானப்படுத்தி-விட்டார்கள்.

இதுவும் போர்த் தந்திரத்தில் தம்பிக்கு நல்லதாகவே அமைந்துவிட்டது. படைகளை கலைத்து, ஆயுதங்களை மறைத்து மக்களுடன் மக்களாக புலிகள் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு அழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிறார்கள் இலங்கை ராணுவத்தினர்.

தமிழகத்தில் ஒரு பழக்கம் இன்னும் கிராமங்களில் உண்டு. அதாவது மரணப்படுக்கையில் உள்ளவர்களுக்கு ‘உயிர் பால்’ ஊட்டுவார்கள். அதுபோல், இலங்கைத் தமிழர்களை கொல்ல எல்லாவித உதவிகளையும் செய்துவிட்டு, இன்று அவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் ‘உயிர் பால்’ ஊட்ட முயற்சி செய்கிறது இந்திய அரசு. அதனை ‘வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று மேடைக்கு மேடை முழங்கிய தமிழக தலைவர்களும் வேடிக்கை பார்ப்பதுதான் வெட்கக்கேடாக இருக்கிறது.

தமிழன் எரிவதையும், காடு அழிவதையும் காட்டுகின்ற இலங்கை ராணுவம், புலிகளின் நவீன ரக டாங்கிகளையோ, போர் விமானத்தையோ அல்லது பெருமளவில் ஆயுதங்களையோ காட்டவில்லை. ஏனென்றால் அவற்றை இன்னமும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை. உடைமைகள், உறவுகள், உறுப்புகள் என சகலத்தையும் இழந்து கையேந்தி வாழும் அவலத்திற்கு வந்துவிட்ட எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் வந்து சேரட்டும் என்பதற்காகவே, தம்பி தலைமறைவில் இருக்கிறார் என்றே எனக்குக் கிட்டும் செய்திகள் சொல்லுகின்றன” என்று கண்கள் மின்னச் சொல்கிறார் அந்தப் புள்ளி.

அடுத்து ஆறுகாட்டுத்துறை மீனவக் கிராம நாட்டாரான சேதுபதியைச் சந்தித்துப் பேசினோம். இவர் இலங்கைத் தமிழர்கள் பலரிடமும் நல்ல தொடர்பில் இருப்பவர். உணர்வுபூர்வமாகவே பேச ஆரம்பித்தார்.

“சிங்களவன் வேறு யாருமல்ல, ஒரு காலத்தில் நம் நாட்டில் உள்ள மேற்கு வங்களாத்திலிருந்து சென்றவர்கள்தான். அந்த இன உணர்வில், அதே மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்புதான், தலைமைக்குப் புலிகளைப் பற்றிய தவறான தகவலை தந்து, புலிகளை அழிப்பதாக எண்ணி, அப்பாவித் தமிழர்களை அழித்து-விட்டார்கள். போரில் வீரமரணம் அடைவது இயற்கைதான். அந்த வகையில் சார்லஸ் அந்தோணி, புலித்தேவன், நடேசன், குணா போன்றோர் இறந்திருக்கிறார்கள். ஆனால் பொட்டு அம்மான், சூசை போன்ற முக்கியத் தளபதிகளுடன் பிரபாகரன் நலமுடன், பாதுகாப்பாக இருக்கிறார் என்றே எனக்கு வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகையிலிருந்து கன்னியாகுமரி வரை மீனவக் கிராமங்களில் பிரபாகரன்தான் அவர்களின் மனம் நிறைந்த தலைவர். அவர் இறந்திருப்பது உண்மையென்றால் எங்காவது ஓரிடத்திலாவது ஒரு படம் வைத்து மாலை போட்டு அஞ்சலி செலுத்தியிருக்க மாட்டார்களா? இலங்கை ராணுவத்தால் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் நானூறுக்கும் மேற்பட்டோர் பலியாகி, அவர்களது குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன. இந்தியக் கப்பற் படையால் நமது மீனவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எனவே, விரைவில் இங்கு முகாமிட்டுள்ள நேவியை எதிர்த்து பெரிய அளவில் கண்டன பேரணி நடத்தப் போகிறோம்” என்று முடித்தார்.

இறுதியாக இலங்கையில் நாற்பதாண்டு காலம் வசித்தவரும், பிரபாகரனிடம் 1980லிருந்து நல்ல அறிமுகத்தில் உள்ளவருமான சீத்தாராமனிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

“எம்.ஜி.ஆர். டைரியில் என் பெயர் இருக்கும். அதுபோல் தம்பி மனதில் எனக்கு இடமிருக்கும். பதினெட்டு வயது தம்பியாக பிரபாகரனை சந்தித்தேன். அப்போதே அதிகம் பேசமாட்டார். வார்த்தைகளை தேவைக்கேற்பவே பயன்படுத்துவார். ஒப்பற்ற, ஈடு இணையற்ற மாவீரன் பிரபாகரன். வீரனுக்கு எப்போதுமே அழிவில்லை என்பது வேறு விஷயம். இதற்கு முன்பு இரண்டுமுறை ‘பிரபாகரன் கொல்லப்பட்டார். உடல் வந்து கொண்டிருக்கிறது’ என்று அறிவித்தார்கள். நானும்கூட அதனை நம்பி, கண்ணீர்விட்டு, போட்டோவிற்கு மாலை போட்டு அஞ்சலியும் செலுத்தியிருக்கிறேன்.

ஆனால் அந்த மாவீரன் ஒவ்வொரு முறையும் மாவீரர் தினமான நவம்பர் 27-ம் தேதியன்று வெளிப்பட்டிருக்கிறார். அதுபோலவே இப்போதும் வருவார் என்றே உறுதியாக நம்புகிறேன். கடந்தவாரம் இலங்கை கவிஞர் காசி ஆனந்தனிடம் பேசினேன். தம்பி நலமாக இருக்கிறார் என்றே எனக்கும் எனது மனைவிக்கும் நல்ல செய்தியைச் சொன்னார். அதையே தான் உங்களுக்கும் சொல்கிறேன். நல்லதை நம்புங்களேன்” என்று முடித்த-போது, அவருடைய வயதை மீறிய உற்சாகத்தைக் காண முடிந்தது.


நன்றி - VIYAPPU.COM