Thursday, April 16, 2009

இந்தியாவின் நிலைப்பாடு...!

1) சிங்கள அரசிற்கு போரில் உதவக்கூடிய ரேடார் கருவிகளை தாங்கள் கொடுத்து உதவவில்லை எனச் சொன்னது.
2) வெளியுறவுத்துறை மந்திரி இலங்கைக்கு சென்று போரை நிறுத்த கோரிக்கை வைக்கப் போவதாக சொன்னது.
3) இந்திய ராணுவ வீரர்களை இலங்கை அரசின் சார்பாக களத்தில் இறக்கி அப்பாவி மக்களின் உயிர்களை அழித்துக்கொண்டிருக்கிறது. ராஜபக்சேயை ஒரு கருவியாக வைத்து சோனியா தனது தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.
போரில் உயிரை விடும் இந்திய ராணுவ வீரர்கள் பற்றிய எந்தவொரு செய்திகளும் காணோம்.
பாவம்.. ஈழ மக்கள் இறந்தாலும் சொல்ல, கேட்க, வருத்தப்பட நாதியிருக்கிறது.
நமது ராணுவ வீரர்களின் நிலை அதைவிட பரிதாபமான நிலை.
உலக வரலாற்றில் இலங்கை இனப்படுகொலையை பற்றித் படித்து தெரிந்துகொள்ளப் போகும்
நாளைய சமுதாயம் இந்திய அரசின் நயவஞ்சக , கண்ணியமற்ற வெளியுறவுக் கொள்கை
நிலையினையும் கண்டிப்பாக நினைவில் நிறுத்தும்.
ஒவ்வொரு தமிழனும் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை நினைத்து
வெட்கித் தலைகுனியவேண்டிய தருணங்கள்.. காலம் பதில் சொல்லும்..

Monday, April 13, 2009

உங்கள் கவனத்திற்கு!

ஈழத்தில் தினந்தோறும் தமிழ் மக்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால் விமானம் மூலம் தமிழ் மக்கள் குண்டுகள் வீசி கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 45 நாட்களில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். இன்னும் எண்ணில்லாத சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் உக்கிரமான போரில் சிங்கள இராணுவத்தால் தமிழினம் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. கூப்பிடு தூரத்தில் ஆறுகோடி தமிழர்கள் தாய்த் தமிழ்நாட்டில் வசித்தாலும் தமிழர்களின் குரல் உலகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை. இல்லையென்றால் அதற்கான முயற்சிகள் யாராலும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்களின் வீரியமிக்கப் போராட்டங்களைத் தவிர்த்து பெரிய அளவிலான எழுச்சி மிக்க போராட்டங்கள் எங்கும் காணப்படவில்லை. முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், அமரேசன், தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம், கோகுல் ரத்னம் உட்பட எழுவர் தீயினால் தங்களின் இன்னுயிரை மாய்த்த பின்னும் தமிழகம் மௌனமாய் இருக்கிறது. தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் தங்களால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய முடியவில்லை என்ற கையறுநிலையில் தங்கள் மரணமாவது தூங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்தின் உணர்வைத் தட்டி எழுப்புவதற்கு உதவியாக இருக்காதா என்ற எண்ணத்தில் அவர்கள் தங்களின் இன்னுயிரை மாய்த்துள்ளனர்.
ஆயுதங்களை அளித்து தமிழினத்தை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் மத்திய அரசின் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும், அதற்கான போராட்டத்தில் தமிழினம் அணிதிரளவேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் நிறைவேற அவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தங்கள் கடமையை மிக அதிக அளவில் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என்று பார்த்தோமானால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதற்குக் காரணம் அவர்களின் மரணத்தை வைத்து போராட்டத்தை வழி நடத்த வேண்டிய தலைவர்கள் தங்களின் கடமையை சரிவரச் செய்யாததேயாகும்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கும், அதில் இடம்பெற்றிருக்கிற தலைவர்களுக்கும், ஈழத்தமிழர் நலனைவிட தங்களின் சொந்த அரசியல் நலனே மேலோங்கி நிற்கிறது. விடுதலைப்புலிகளின் பிரச்சார பீரங்கியாகத் திகழும் வைகோ மகிந்த இராஜபக்சேவின் குரலாக ஒலிக்கும் ஜெயலலிதாவின் காலடியில் நின்று ஈழத்தமிழர் நலன் பற்றிப் பேசுகிறார். கருணாநிதியின் ஈழத் தமிழருக்கு எதிரான துரோகத்தை நீட்டி முழங்கும் வைகோ மறந்தும் கூட ஜெயலலிதாவின் துரோகத்தைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. சோனியா காந்தியின் மந்திரி சபையில் பதவி வகித்துக் கொண்டு காங்கிரசின் துரோகத்தைப் பற்றி அதிகம் பேசாமல் தன்மீதான விமர்சனக் கணைகளை லாவகமாக கருணாநிதியின் பக்கம் திருப்பிவிட்டு அரசியல் செய்கிறார் இராமதாஸ். மத்திய அரசின் துரோகத்தைப் பற்றி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு குரலில் பேசும் திருமாவளவன் மத்திய அரசின் துரோகத்தில் பங்கு வகிக்கும் கருணாநிதிக்கு எதிராக மறந்தும் பேச மறுக்கிறார். மதவாத பா.ஜ.க.வோ ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழர்களை அழிக்கும் மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை அடியற்றி தனது கொள்கைகளை வைத்திருக்கிறது. ஈழத் தமிழர் கோ¤க்கைகளை ஒப்புக்கு வலியுறுத்திப் பேசி அதன் மூலம் தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியாதா என்று வாய்ப்பு தேடுகின்றது. அவர்களையும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்த்துக் கொண்டு ஈழத் தமிழர் நலனுக்காக போராடுகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் மிகக் குறைந்த விழுக்காட்டு அளவே உள்ள குஜ்ஜார் இன மக்கள் தங்கள் வீரியமிக்க போராட்டத்தின் மூலம் ஒரே வாரத்தில் இந்தியாவையே தங்கள் பக்கம் திரும்ப வைத்தனர். தங்கள் கோரிக்கைகளையும் வெற்றிகரமாக ந¤றைவேற்றிக் கொண்டனர். அத்தகைய போராட்டத்தை நாம் தற்பொழுது நினைவில் கொள்ள வேண்டும்.
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு செத்துப்போன ராஜீவ்காந்தியின் மரணம் இன்று வரை வெற்றிகரமாக அவர்களால் அவர்களின் அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அறுவரின் மரணமும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இவ்வாறு யாருடைய உழைப்பும் இல்லாமல், யாருடைய அணிதிரட்டலும் இல்லாமல் பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் இயல்பாய எழுந்த மக்கள் எழுச்சி, சரியான வழிகாட்டுதலும், முன்னெடுத்தலும் இல்லாமல் கண்முன்னே கரைந்துகொண்டிருக்கிறது. பற்றி எரிய வேண்டிய தமிழகம் சருகாகக் கிடக்கின்றது. எழுவர் பற்றி வைத்த தீயை தலைவர்கள் விழலுக்கு இரைத்த நீராக மாற்றிவிட்டார்கள்.
ஆகவே இனிமேலாவது போராட்டங்களை சடங்காகச் செய்வதை நிறுத்திவிட்டு உலகத்தின் கவனம் நம்மீது திரும்பும் வகையில் நடத்த வேண்டும். இல்லையென்றால் கண்முன் இனம் அழிவதை பார்த்துக் கொண்டிருக்கும் மௌன சாட்சிகளாக நாமும் இருப்போம்.!


நன்றி
கீற்று .com

ஹையோ....,ஹையோ...!!!


வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு போறேன்..

நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."


ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"


கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."


ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."


ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."


விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."


வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"


தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்...!"


விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"


சோனியா காந்தி: "என்னா வில்லத்தனம்?"


அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"


மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"


மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"


லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."


பிரணாப் முகர்ஜி : "முடியல..."


திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."


சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"


கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...."


ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"

Saturday, April 11, 2009

"தேர்தல் அறிக்கை"

இரண்டு படங்கள் நடித்து முடித்ததும் புதுக்கட்சி, ஒரு இடைத்தேர்தலைச் சந்தித்த கையோடு முதல்வர் நாற்காலிக் கனவு என்பதே இன்று அரசியல் தத்துவமாகிவிட்டது.
இவர்களிடமிருந்து மக்கள் பெரிதாக என்ன எதிர்பார்க்க முடியும்?
என்ன மாதிரியான தொலைநோக்கு சிந்தனை இவர்களுக்கு இருக்கும்?

பாரதிய ஜனதாவோ, ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுவார்கள் என்கிறது. இப்படி வரி வருமானத்தில் விலக்குகள் அளிக்கப்படத் தொடங்கினால், அதற்கு ஒரு முடிவே கிடையாதே. வருமான இழப்பு ஒருபுறம்; இலவச வாக்குறுதிகள் மற்றொருபுறம். அரசு செயல்படுவது எங்ஙனம்?

தமிழகத்தில் தொடங்கிய இலவச சைக்கிள் திட்டம், வண்ணத் தொலைக்காட்சி விநியோகம் மற்றும் கிலோ ஒரு ரூபாய் அரிசி போன்ற திட்டங்கள் ஏனைய மாநிலங்களின் அரசியல் கட்சிகளால் தேர்தல் நேர வாக்குறுதிகளாக்கப்பட்டிருக்கின்றன.

தேவை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்கிற பாரபட்சமே இல்லாமல், அரசு பணத்தை எடுத்து வருவோர் போவோருக்கெல்லாம் விநியோகம் செய்வது என்பது என்ன புத்திசாலித்தனமோ தெரியவில்லை. இப்படிப்பட்ட ஊதாரித்தனத்தின் விளைவுகளை, மீண்டும் பொதுமக்கள்தான் பாவம் சகித்துக் கொள்ள நேரிடும் என்பதுதான் துர்பாக்கியம்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக நமது அரசியல் கட்சிகள் வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசுவதற்குப் பெயர் தேர்தல் அறிக்கை என்றாகிவிட்டிருக்கிறது. எந்தவித செயல்திட்டமோ, கொள்கைப் பிடிப்போ இல்லாமல், எப்படியாவது வாக்காளர்களைக் கவர்ந்து ஆட்சியில் அமர்ந்து விடுவது மட்டும்தான் தங்களது லட்சியம் என்று அரசியல் கட்சிகள் நினைக்கத் தொடங்கிவிட்டன.

தேர்தலில் அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு இலவசம் என்கிற பெயரில் வாரி வழங்கும் வாக்குறுதிகளும் ஒருவகையில் லஞ்சம்தான். இது ஆபத்தின் அறிகுறி!

இலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்: இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்!



இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்கு படாமல் திறமையாக மறைக்கப்படுகின்ற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்ற இனவெறிப் போர் என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழான 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா' வுக்கு எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான 'புக்கர் பரிசு' பெற்ற 'த கொட் ஓஃப் ஸ்மோல் திங்ஸ்' எனும் புதினத்தை எழுதியவர் அருந்ததி ரோய்.
இலக்கியப் பணிகளுக்கு இடையே சமூகத்தின் தீவிரப் பிரச்சினைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கு எதிராக களமிறங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவரின் கட்டுரையை இங்கு தமிழில் தருகிறோம்:
இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்துக்கு, சூழ்ந்துள்ள மௌனமே காரணம். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, இந்தியாவில் உள்ள முதன்மையான செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் சரி, அனைத்துலக செய்தி ஏடுகளிலும் சரி ஏறக்குறைய செய்திகளே வெளிவருவதில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விடயமாகும்.
இலங்கையில் இருந்து கசிந்து வரும் சிறிதளவு தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நாட்டில் ஜனநாயகத்தின் அடையாளம் ஏதேனும் தென்பட்டால் அதனைத் தகர்ப்பதற்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்களை இழைப்பதற்குமே 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பரப்புரையை சிறிலங்கா அரசு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தி வருகிறது என்றே தோன்றுகிறது.
தங்களை அப்பாவிகள் என்று மெய்ப்பிக்காத வரையில், ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிதான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் சிறிலங்கா அரசு, அப்பாவி மக்கள் உள்ள பகுதிகள், மருத்துவமனைகள், தங்கும் இடங்கள் மீது குண்டு வீசி அவற்றைப் போர்ப் பகுதியாக மாற்றி வருகிறது.
சண்டை நடைபெறும் பகுதியில் 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பகமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.
இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறுகூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.
ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகளைத் 'துடைத்து எறிய வேண்டும்' என்பதை சிறிலங்கா அரசு அறிவிக்கப்பட்ட குறிக்கோளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அப்பாவி மக்களும், 'பயங்கரவாதிகளும்' வீழ்ந்து கொண்டிருப்பது, சிறிலங்கா அரசு இனப் படுகொலையை நடத்தும் விளிம்பில் இருப்பதன் அறிகுறியாகத் தோன்றுகிறது.
ஏற்கெனவே பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பல்லாயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்கள் நரகத்துக் கொடுமைகளின் அனுபவச் சித்திரிப்புகளாக உள்ளன.
இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்குப் படாமல் திறமையாக மறைக்கப்படுகிற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகிற இனவெறிப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.
தண்டனைக் உட்படாமல் சிறிலங்கா அரசு இந்தக் குற்றங்களை இழைத்து வருகிறது. ஆழமாக வேரோடியுள்ள இனவெறித் தப்பெண்ணங்கள்தான் இலங்கையில் தமிழர்கள்ஒதுக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளன என்பதையே இது உண்மையில் வெளிப்படுத்துகிறது. அந்த இனவெறிக்கு சமூகப் புறக்கணிப்பு, பொருளாதார முற்றுகை, கலவரம், சித்திரவதை என நீண்ட வரலாறு உண்டு.
வன்முறையற்ற அமைதி வழியிலான எதிர்ப்பாகத் தொடங்கி, பல பத்தாண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரின் கொடிய தன்மைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.
ஏன் இந்த மௌனம் இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயற்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை என்று இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.
சமுதாயத்தை 'அச்சத்தில் உறைய வைக்கிற' கொலைக் கும்பல்கள், 'வெள்ளை வேன் கடத்தல்கள்' தொடர்பாக எல்லாம் சமரவீர தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உட்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்.
பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் சிறிலங்கா அரசு பயன்படுத்துவதாக அனைத்துலக பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு பொருள் உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. மற்ற நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான்? சீனா? சிறிலங்கா நிலைமைக்கு உதவி செய்ய அல்லது தீங்கு விளைவிக்க என்ன செய்கின்றன?
இலங்கையில் நடைபெறும் போர் தமிழ்நாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. 10-க்கும் அதிகமானோர் தீக்குளித்து இறந்துள்ளனர். அரசியல் தந்திர வெளிப்பாடுகள் சில இருந்தாலும், பெரும்பாலும் மக்களின் சீற்றமும், வேதனையும் மெய்யானவை. இது தேர்தல் சிக்கலாக மாறியிருக்கிறது.
இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் அசாதாரணமானது. இங்கே ஏன் இந்த மௌனம்? இந்தச் சிக்கலில் இங்கே 'வெள்ளை வான் கடத்தல்கள்' எதுவும் இல்லையே. இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பாதிப்பின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த மௌனம் மன்னிக்க முடியாதது.
முதலில் ஒரு பக்கத்துக்கு ஆதரவாகவும் பிறகு இன்னொரு பக்கத்துக்கு ஆதரவாகவும் நிலை எடுத்து பொறுப்பற்ற முறையில் பட்டும் படாமல் மேலோட்டமாகச் செயற்படும் இந்திய அரசின் நீண்ட கால வரலாற்றைப் பார்க்கும்போது இந்த மௌனம் மிகவும் மன்னிக்க முடியாதது. நான் உட்பட, நம்மில் பலரும், இது தொடர்பாக முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போர் பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்காததே அதற்குக் காரணம்.
படுகொலைகள் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினிக் கொடுமையை எதிர்நோக்கி உள்ளனர். ஓர் இனப் படுகொலை நிகழ்வதற்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் நாட்டில் ஏன் இந்த சாவு அமைதி? இது மாபெரும் மனிதப்பேரழிவுத் துன்பம். காலம் கடப்பதற்கு முன் உலகம் இப்போதே தலையிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, April 10, 2009

இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்!


வன்னியில் இன்று மும்முரமாக முன்னெடுக் கப்படும் போரின் மூலம் என்ன?... தமிழினத்தின் உண்மையான எதிரி யார்?... அந்த எதிரியை முறியடிக்க உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியது உண்மையில் என்ன?... என்ற விடயங்களை இங்கே ஆராய்கின்றார் தி.வழுதி.
"புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772.
அதாவது - சராசரியாக - ஒவ்வொரு நாளும் 14 தமிழர்கள் கொல்லப்பட்டு, 57 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை - இந்த ஒவ்வொரு நாளும் - போர்க்களத்தில் வீழ்ந்து போன, விழுப்புண்பட்ட புலிப் போராளிகளின் எண்ணிக்கை இங்கே சேர்க்கப்படவில்லை. இறந்து போன, போர்க்காயமடைந்த அவர்களும் தமிழர்களே.
இது தவிர - வன்னியில் இருந்து வெளியேறிய 160 வரையான தமிழ் இளம் பெண்களும், இளைஞர்களும் - இரகசியமான சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு - வதை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக வெளியில் சொல்ல முடியாத ஆதாரங்களில் இருந்து நம்பகமான தகவல்கள் உண்டு.
தெளிவாக - இது ஓர் இனப்படுகொலைப் போரே அன்றி வேறொன்றும் அல்ல.
ஆனால் - இந்த இனப் படுகொலைப் போரை நடத்துவது யார் என்பதிலும், அதற்கு எதிராக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதிலும் தான் எமக்கு தெளிவு தேவை.
பிண மலையாகத் தமிழர்கள் வன்னியில் குவிந்தாலும் சரி, முத்துக்குமாரர்களாக "சாஸ்திரி பவன்" முற்றத்தில் தமிழர்கள் எரிந்தாலும் சரி - அன்னை சோனியாவின் ஆன்மா கரையப் போவதில்லை.
தமிழ்த் தேசிய எழுச்சித் தீயை அணைத்து அடக்கும் வரை - காங்கிரசின் இந்திய வல்லாதிக்கம் ஓயப்போவதில்லை.
பிரபாகரனின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடிக்கும் வரை - சோனியா காந்தி நிம்மதியாக தூங்கப் போவதில்லை.
என்றோ இறந்து போன ராஜீவ் காந்திக்காக - நேற்றும் இன்றும் நாளைக்கும், இனி என்றும் தமிழர்களைப் பழி தீர்த்துக்கொண்டே இருக்கப் போகின்றது காங்கிரசின் இந்தியா.
சிவ்சங்கர் மேனனையும், பிரணாப் முகர்ஜியையும், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த உணவு மூட்டைகளையும் சிறிலங்காவுக்கு பகிரங்கமாக அனுப்பி - மற்ற நாட்டுக்காரர்களைத் தள்ளி நிற்க வைத்து விட்டது இந்தியா.
நோர்வேயின் எரிக் சொல்கெய்ம் - மிக அண்மையில் - புலிகளிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார், "இப்போது எமது கையில் எதுவுமே இல்லை", என்று.
உலகத் தமிழர்களே! இது எமக்குரிய நேரம்: இதுவே தான் எமக்கான நேரம்!
எமக்காக எழுந்துவிட்ட ஏழு கோடி தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து - உலகத் தமிழர்கள் நாம் - எம்மைப் பழி தீர்க்க முனையும் இந்தியாவின் இந்த குரூர வெறிக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.
ஊரில் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகளைப் பார்த்து, கொதிப்படைந்து - ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வுப் பெருக்கோடு எதையாவது செய்து கொண்டிருக்கின்றோம்.
உலகு எங்கும் - கவனயீர்ப்பு நிகழ்வுகள் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து, மனுக்கடிதங்கள் எழுதி, மனிதச் சங்கிலிகள் பிடித்து - எங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் பிழையான இடங்களின் மீது நாம் காட்டிக்கொண்டிருக்கின்றோம்.
சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் போட்டு தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தமாறு உலக நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் நாம் வேண்டுகின்றோம்.
ஆனால் - தமிழர் இனப் படுகொலையை நிகழ்த்துவது சிறிலங்கா அல்ல; அது இந்தியாவே என்பதை நாம் உணர வேண்டும்.சிறிலங்கா இப்போது வெறும் பொம்மை மட்டுமே; இது இந்தியா இயக்கும் போர் என்பது எல்லோருக்குமே தெரியும்.
இப்போதுள்ள சூழலில் - தென்னாசியாவில், இந்தியாவை மீறி எதுவுமே நடக்கப்போவதில்லை.
மேற்குலக நாடுகள் என்றாலும் சரி, ஐக்கிய நாடுகள் சபை என்றாலும் சரி -
ஆகவும் மிஞ்சிப் போனால் - எமது ஆய்க்கினை தாங்காமல் - ஒரு அறிக்கையை விடுவார்கள்; கவலை தெரிவிப்பார்கள். அதற்கு மேல் அவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள்; அவர்களால் எதுவும் செய்யவும் இயலாது.
இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்.
"வெள்ளை மாளிகை" முன்றலிலும், "டவுணிங் ஸ்ட்றீட்"டிலும், ஒட்டாவாவின் வீதிகளிலும் மற்றும் மேற்குலகின் சாலைகளிலும் நாம் நடத்தும் பேரணிகள் உண்மையில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்குச் சங்கடங்களையே ஏற்படுத்தும்.
எம் மீது ஒரு வகையான சினத்தைக்கூட - அந்தந்த நாட்டு அரசுகளினதும், அந்தந்த நாட்டு மக்களினதும் மனங்களில் - உருவாக்கப் பார்க்கும். ஒரு வகையில் - தேவையற்ற பகை உணர்வைக்கூட, அது தமிழர்களுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஏற்படுத்தும்.
மேற்குலக அரசுகளின் ஆதரவு பின்னால் எமக்கு தேவை: இப்போது, எதுவும் செய்ய முடியாத சூழலில் அவர்கள் இருக்கும் போது - அவர்களைச் சங்கடப்படுத்துவது நமக்கு நன்மையைச் செய்யாது; அது அழகும் அல்ல.
எனவே - அளவுக்கு அதிகமான தொந்தரவைக் கொடுக்காமல் ஓரு தூர நோக்கப் பார்வையோடு மேற்குலகை நாம் விட்டுவைக்க வேண்டும்.
இப்போது -
எமது துடிப்பு - சக்தி - கவனம் எதனையும் வேறு இடங்கள் நோக்கிச் சிதற விடாமல் - எல்லாவற்றையும் இந்தியாவை நோக்கியே நாம் செலுத்த வேண்டும்.
உலகத் தமிழர்களின் பொங்கும் உணர்வு எழுச்சியைப் பல திசைகளிலும் பரவ விட்டு, எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்காமல் -
அதை ஒருங்கே குவித்து - சரியான இலக்கை நோக்கி நகர வைக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்களின் கைகளிலேயே இப்போது உள்ளது.
அந்த சரியான இலக்கு - இந்தியா.
என்றுமில்லாத அளவுக்கு பேரெழுச்சி கொண்டுள்ள தமிழக மக்களுக்குப் பின்னால் உலகத் தமிழர்கள் உடனேயே அணிதிரள வேண்டும். எமக்காகப் போராடும் அவர்களோடு நாம் ஒன்றிணைய வேண்டும்.
விடுதலைப் புலிகளின் கோலாகலமான ஒரு போர் வெற்றிக்காக இரண்டு வருடங்கள் நாம் காத்திருந்தோம்: எதுவுமே நடக்கவில்லை; நடக்க இந்தியா விடவில்லை.
இப்போது - காங்கிரஸ் ஆட்சியின் கேவலமான ஒரு வீழ்ச்சிக்காக நான்கு மாதங்கள் காத்திருக்க எமக்கு அவகாசம் எதுவும் இல்லை; அதன் பிறகு கூட ஏதாவது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவதமும் இல்லை.
உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்களை நாம் இப்போதே முற்றுகைக்கு உள்ளாக்க வேண்டும்.
தொடர்ச்சியாக - இடைவிடாமல் - ஒருங்கு திரட்டப்பட்ட செயல் வீச்சோடு - அதை நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு செய்ய வேண்டும்.
லண்டன் நகர வீதிகளில், ஒரு லட்சம் பேர், ஒரே நாளில் திரண்டு பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்வுக்குச் சிரமங்கள் தருவதைத் தவிர்த்து விட்டு - லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தை 5 ஆயிரம் பேராக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும்.
அதேபோல - ரொறான்ரோ நகர வீதிகளில், 80 ஆயிரம் பேர், ஒரே நாளில் திரண்டு கனடிய மக்களின் அன்றாட வாழ்வுக்கு அலுப்புத் தருவதைத் தவிர்த்து விட்டு - கனடாவுக்கான இந்தியத் தூதரகத்தை 4 ஆயிரமாக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும்.
இதே போல ஒவ்வொரு நாடுகளிலும் செய்ய வேண்டும்.
தமிழர் பிரச்சினை தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்க முடியாத - நாளாந்த அலுவல்களில் சிரத்தை காட்ட முடியாத - செயலிழப்பு நிலைமைக்கு வெளிநாட்டு இந்தியத் தூதரகங்களை நாம் உள்ளாக்க வேண்டும்.
எமது இடைவிடாத முற்றுகைகள் மூலம் - தூதரக அதிகாரிகளையும், தூதுவர்களையும் செயற்பட முடியாத அளவு எரிச்சலுக்கும், சினத்திற்கும் உள்ளாக்க வேண்டும்.
தமது தூதரகங்களுக்கே சென்றுவர முடியாதுள்ள - தமது பணிகளை ஆற்ற முடியாதுள்ள தமது கையாலாகாத்தனத்தை அவர்கள் டெல்லித் தலைமைக்கு முறையிட வைக்க வேண்டும்.
தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல; இந்தியா தான் என்பதை இந்த உலகின் முற்றத்தில் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
இந்தியா நடத்தும் இந்தப் படுகொலைப் போரின் பழியை இந்தியாவின் தலையிலேயே நாம் சுமத்த வேண்டும்.
ஓரு பழம்பெரும் இனத்தை அழிக்கும் நாடு என்ற அவமான வெட்கத்தை இந்தியாவின் முகத்தில் நாம் பூச வேண்டும்.
அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் யாவும் அமைய வேண்டும்.
உண்மையில் - மேற்குலகத் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் நாம் நேரடியாக எதனைமே சொல்ல வேண்டியதில்லை:
உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்னால் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நாம் நடத்தும் முற்றுகைப் போராட்டமே - சொல்ல வேண்டிய செய்தியை அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்குச் சொல்லும்.
படுகொலைப் பழியை இந்தியா மீது சுமத்தி - இந்தியாவை கூனிக்குறுக வைத்து - தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் விருப்பத்தை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் மேற்குலக நாடுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.
மேற்குலக நாடுகளை அவ்வாறான முடிவுகளை எடுக்க வைப்பதன் மூலம் - சோனியா காந்தியின் குரூர விருப்பங்களை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் காங்கிரஸ் தலைமையை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.
நாம் தெளிவாக இருப்போம் -
சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி. அதனையே நாம் இலக்கு வைக்க வேண்டும். மேற்குலக நாடுகளையும், அதன் தலைவர்களையும் நோக்கி எமது கவனத்தையும், சக்தியையும் சிதறவிடாமல் - இந்தியாவை நோக்கியே எமது எண்ணங்களையும், செயல்களையும் நாம் ஒருங்கு குவிக்க வேண்டும்.
ஒரேயடியாக - இந்தப் பிரச்சினைக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.
இந்தியாவை நோக்கிய எமது செய்தி - உலகம் முழுவதிலும் - ஒன்றாகவே இருக்க வேண்டும்:
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!சிறிலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து!

நன்றி

[ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009, 05:36 மு.ப ஈழம்] [தி.வழுதி] புதினம் செய்தி பிரிவு

கோயில் கட்டுவதா"எதிர்கால பிரதமரின்" பணி?


20 ஆண்டுகளுக்கு முன்பு 2 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஒரு கட்சி மசூதியை இடித்துக் கோயில் கட்டவேண்டும் என்று பேசி - கிளர்ச்சி செய்து, இந்து மக்களின் மலிவான மத உணர்ச்சியைக் கிளப்பிவிட்டு ஊதிப் பெரிதாக்கி 184 எம்.பி.க்களைப் பெறும் அளவுக்கு மக்கள் ஏமாந்து போகும் நிலை ஏற்பட்டது. பின்னர் 5 ஆண்டுகளில் நாட்டை ஆளும் அவலம் கூட ஏற்பட்டுவிட்டது.


அவர்களின் ஆட்சிக் காலத்தில் எவ்வளவு மோசமாக இந்துமத வெறி தலை தூக்கி ஆடியது என்பதை நியாய உணர்வு கொண்ட எவரும் மறைக்கவோ, மறுக்கவோ மறக்கவோ முடியாது. முழுக்கவும் காவி மயமாக்க வேண்டும் என்பதால் கல்வியைக் கறைப்படுத்தினார்கள்.


பாட நூல்களை எல்லாம் மாற்றினார்கள். இந்து மதமே உயர்ந்தது என்பதைப்போலவும், ஆரியர்கள் சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள், அவர்களின் தந்தையர் நாடான பாரதம் பாரிலேயே உயர்ந்த நாடு - அதற்கு அடிப்படைக் காரணம் ஆரியக் கலாச்சாரம் என்றெல்லாம் கல்வித் திட்டத்தைத் தலைகீழாக மாற்றி எழுதிவிட்டார்கள்.


அறிவற்றவன் கடலில் தூக்கிப் போட்ட கல்லைத் தேடிக் கண்டுபிடிப்பது போன்ற கடினமான பணியில் பின்னர் வந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈடுபட்டுப் பெருத்த முயற்சிக்குப் பின் உண்மை வரலாற்றைச் சொல்லித் தரும் நிலையை உருவாக்கியது. ஆனாலும் இன்னும் திருத்தம் செய்ய வேண்டிய நிலை.


மதவெறி எவ்வளவு தூரம் சல்லடம் கட்டிக் கிளம்புகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு

"ராமர் கோவில் கட்டியே தீருவோம் "- பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகிறார்!புதுடில்லி, பிப். 8- பாரதிய ஜனதாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டியே தீருவோம்; அதற்கான உரிய வாய்ப்புக்காகக் காத்திருக்கிறோம் என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கோயில் கட்டுவதா"எதிர்கால பிரதமரின்" பணி?

நாங்கள் ராமனைவிட்டு விலகுவதுமில்லை; ராமனுக்குக் கோயில் கட்டும் ஆசையை விட்டுப் பிரிகிறதும் இல்லை" என்று பேசியுள்ளார் அத்வானி.ராமனுக்கே வெற்றி என்கிற பிற்போக்குத்தனமான முழக்கம் அவர்களின் இதயத்திலிருந்து வருகிறதாம்.பா.ஜ.கட்சி மீண்டும் பதவிக்கு வந்ததும் கோயிலைக் கட்டத் தொடங்குவார்களாம்! எதிர்காலப் பிரதமர், மக்கள் நல் வாழ்வுக்கான திட்டங்களைச் சொல்லிப் பிரச்சாரம் செய்யாமல் - மறைமுக மதவெறித் திட்டத்தைப் பேசுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Thursday, April 9, 2009

சரியான செருப்படி!

"போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்ற ஜெயலலிதாவின் பொன் முழக்கம் வரலாற்றில் இடம் பெற்றது போல இந்திரா காந்தி கொலையான 1984 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த சீக்கிய இனப் படுகொலையைப் பற்றி ” ஒரு ஆலமரம் விழுந்தால் பூமியில் அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும் ” என்று நியாயப்படுத்திய ராஜீவ் காந்தியின் திமிரும் வரலாற்றில் பதிவாக்கியிருக்கிறது. அந்தக் கலவரத்தில் டெல்லியில் உள்ள சீக்கிய மக்கள் காங்கிரசுக் கும்பல்களால் தேடித் தேடி கொல்லப்பட்டார்கள்.

இதுநாள் வரை அந்தக் கலவரத்திற்கு காரணமான பெரும்பான்மையான நபர்கள், தலைவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. இடையில் அந்தக் கலவரத்திற்கு சீக்கிய மக்களிடம் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டு நடித்ததும் நடந்தது. ஆனால் இந்தக் கலவரத்தில் கொலைகாரக் கும்பலை வழிநடத்திய சஜ்ஜன் குமார், ஜகதீஷ் டைட்லர் இருவரும் குற்றவாளிகள் என பல வழக்குகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்து வந்த சி.பி.ஐ இருவரும் குற்றவாளிகள் இல்லை என பொய்யாக நற்சான்றிதழ் வழங்கியது. இதனால் இந்தக் கயவாளிகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரசு தீர்மானித்திருக்கிறது. அன்றைக்கு ராஜீவ் கொழுப்பெடுத்து சொன்னதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
இந்த அநீதியை எதிர்த்துத்தான் தைனிக் ஜாக்ரன் எனும் தினசரியில் பணியாற்றும் ஜார்னைல் சிங் என்ற பத்திரிகையாளர் டெல்லி காங்கிரசு தலைமயகத்தில் வைத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சி.பி.ஐயை கட்டுப்படுத்தும் ப.சிதம்பரத்திடம் கேட்டார்.

கொலைகாரர்களை அங்கீகரிக்கும் காங்கிரசின் நயவஞ்சக்த்தை அதெல்லாம் ஒன்றுமில்லையென சிதம்பரம் பதில் கூற மறுத்த் போதுதான் அவர் சினமடைந்து செருப்பை வீசீனார். பின்னர் தனது நடவடிக்கை தவறென்றாலும் தான் எழுப்பிய பிரச்சினையும் கேள்வியும் இன்னமும் விடையளிக்கப்படாமல் உள்ளதென தெரிவித்தார்.

ப.சிதம்பரம் இந்த நிருபரை பெருந்தன்மையாக மன்னித்து விட்டாராம். சீக்கிய மக்களைக் கொன்ற கொலைகாரக் குற்றவாளிகளையே வேட்பாளர்களாக நியமித்த கட்சியின் நடவடிக்கை மட்டும் குற்றமாகத் தெரியவில்லை. நிச்சயம் சீக்கிய மக்கள் இந்தக் கயவாளிகளை மன்னிக்கமாட்டார்கள்.

ஈழத்திலும் இதுதான் நடந்து வருகிறது. தற்போது இந்திய இராணுவம் நேரடியாக வன்னிப்போரில் பங்கேற்றிருப்பது குறித்து பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும் போரில் பயன்படும் விசவாயு உட்பட நவீன நாசாகார குண்டுகளெல்லாம் இந்தியாவின் நன்கொடையாக இலங்கை இராணுவத்திற்கு அளிக்கப்பட்டு தமிழ் மக்களை கொன்று வருகின்றன. இந்தியா நடத்தும் இந்தப்போரை எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறந்து பேசுவதில்லை. மாறாக போரை நிறுத்துவதற்கு இந்தியாவிடமே தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும் மன்றாடுகிறார்கள். எனவேதான் இந்தத் தேர்தல் என்பது தமிழ் மக்களின் தன்மான உணர்வை எடுத்துக்காட்ட வேண்டுமென்றால் புறக்கணிப்பின் மூலமே அதைச் செய்ய முடியுமென கூறுகிறோம்.

ஈழத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் இருப்பவர்களும் பங்கேற்கும் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதுதான் நாம் செய்ய வேண்டிய சரியான செருப்படி

Tuesday, April 7, 2009

என்ன செய்யப்போகிறது தேர்தல் கமிஷன்?


லோக்சபா தேர்தல்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு விகிதத்தை விட ஓட்டுப் போடாதவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் 40 சதவீதம் பேரது விருப்பத்துக்கு மாறாகவே பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு, கோடை வெயிலில் வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போட வேண்டுமா என்ற சோம்பல் தான் முக்கிய காரணங்கள்.

இந்தியாவில் இதுவரை நடந்த தேர்தல்களில், 1952ம் ஆண்டு தேர்தலில் 61.2 சதவீதமும், 1957ல் 62.2, 1962ல் 55, 1967ல் 61.3, 1971ல் 55.3, 1977ல் 60.5, 1980ல் 56.9, 1984ல் 64, 1989ல் 62, 1991ல் 61, 1996ம் ஆண்டு தேர்தலில் 57.94 சதவீதமும் ஓட்டுப் பதிவானது. தமிழகத்தில் 1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 66 சதவீத ஓட்டுப் பதிவானது; 1998ல் 56 சதவீதமாக குறைந்தது. கடந்த 1999 லோக்சபா தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 60 கோடியே 23 லட்சம் பேர். அவற்றில் ஓட்டுப் போட்டவர் 37 கோடியே 37 லட்சம் பேர். 22 கோடியே 86 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லை.

மாநில அளவில் அதிகபட்சமாக திரிபுராவில் 81 சதவீதம் ஓட்டுப் பதிவானது. மிகக் குறைந்த அளவாக காஷ்மீரில் 41 சதவீதம் ஓட்டுப் பதிவானது. நாட்டின் தலைநகரான டில்லியில் 51 சதவீதம் மக்கள் தான் ஓட்டுப் போட்டனர். இத்தேர்தலில் இந்தியாவில் 619 கட்சிகள் இருந்தன. ஆனால், 176 கட்சிகள் தான் தேர்தல் களத்தில் இறங்கின. அவற்றில் 138 கட்சிகளுக்கு 0.1 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டே கிடைத்தது. 37 கட்சிகள் தான் வெற்றி பெற்றன. 138 கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. மொத்த வாக்காளர் எண்ணிக்கையை கணக்கிட்டால் காங்கிரஸ் 16 சதவீதம், பா.ஜ., 15 சதவீதம், மார்க்சிஸ்ட் 3 சதவீதமும் ஓட்டு பெற்றன. அதேவேளை ஓட்டுப் போடாதவர்கள் 38 சதவீதம் பேர் இருந்தனர். அதாவது முதல் இரு இடங்களை பெற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜ., பெற்ற ஓட்டை விட ஓட்டுப் போடாதவர்கள் தான் அதிகம்.

கடந்த 2004 தேர்தலின் போது தேசிய அளவில் மொத்த வாக்காளர்கள் 67 கோடி. ஆனால், 38 கோடியே 74 லட்சம் ஓட்டுகளே பதிவானது. இது 57.82 சதவீதமாகும். மீதமுள்ள 28 கோடி பேர் ஓட்டுப் போடாமல் இருந்து விட்டனர். இது 42.18 சதவீதமாகும். கேரளாவில் அதிகபட்சமாக 61 சதவீதம், தமிழகத்தில் 60.56 சதவீதம், தலைநகர் டில்லியில் 50 சதவீதம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் 45, இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், சண்டிகரில் 40 - 45, உத்தரகண்ட், உத்தரபிரதேசத்தில் 35, மிகக் குறைந்தபட்சமாக சிக்கிமில் 30 சதவீதம் ஓட்டுப் பதிவானது. வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர் விடுபட்டதே இதற்கு காரணம் என கட்சிகள் குற்றம்சாட்டின.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 26.69 சதவீதம், பா.ஜ., 22.16, மார்க்சிஸ்ட் 5.69, பகுஜன் 5.35, தேசியவாத காங்கிரஸ் 1.78, கம்யூனிஸ்ட் 1.40 சதவீதம் ஓட்டுகள் பெற்றன. ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் பெற்ற ஓட்டு விகிதத்தை விட, ஓட்டுப் போடாதவர்கள் விகிதம் அதிகமாக இருந்தது. அதாவது, கடந்த முறை மன்மோகன் பிரதமரானது 57 சதவீதம் பேர் அளித்த ஓட்டால் மட்டுமே. மற்றவர்கள் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று இருந்து விட்டனர்.

-நன்றி-

தினமலர்

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்!

சிலவேளை மாடுகள்
பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.
மேய்ச்சல் தரைகளில்
குண்டுகள் காத்திருந்தன.
மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள்.
மிஞ்சியிருக்கும் இரண்டு
மாடுகளின்
சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன.
மாதாவின் தலை
அவளது கைகளுக்கு
எட்டாமல் விழுந்திருக்கிறது.
மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்.

தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில்
வாழுகிற மாடுகளாயிருந்தன.
தடைசெய்யப்பட்ட
குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன.
ஒரு குழந்தை
வாய்க்காலில் மறைந்து தப்பியிருக்க
மாட்டுக்கன்றுகள்
பால் காயு முன்பாகவே
இறந்து கிடக்கின்றன.

கொம்பு முளைத்த மாடுகளிடம்
எந்தத்துவக்குகளும் இல்லை.
இராணுவ உடைகளையும்
அணிந்திருக்கவில்லை.
வெடித்துச் சிதறிய குண்டு
மாடுகளை அள்ளி எடுத்த
பட்டியில்
துணைக்கு ஒரு நாய் மட்டும் நிற்கிறது.

சிதறிய சதைகளை
தின்ன முடியாதிருக்கும் மீறிய பலிகளில்நாய் ஊளையிடுகிறது.
பாலுக்கு அழுகிற குழந்தை
தலை துண்டிக்கப்பட்டிருக்கிற
மாதாவை தேடுகிறது
இறந்த பசுவை
தேடுகிற கன்றினைபோல.

காயப்பட்ட உடல் பகுதியிலிருந்தும்
பட்டியிலிருந்தும்
மேய்ச்சலுக்காய் திரிந்த
தரைகளிலிருந்தும்
குருதிதான் பெருக்கெடுக்கிறது.
மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்?

பசுக்கள் குழந்தைகளுக்கு
பாலினை கொடுத்தது
பெருந்தவறு என்கிறது பராசூட் கொத்தணிக்குண்டு.
வாய்களை மீறி
மாடுகளிடம் அழுகை வருகிறது.
அவைகள் எதையும் பேசப்போவதில்லை?
குண்டுகளோடும்
கட்டளையிடுகிற இராணுவத் தளபதிகளோடும்
அதிகாரத்தோடும்?
மாதாவிடமும் எந்த
திருச்சொற்களும் இல்லை.

மாதாவும் மாடுகளும்
வாய்பேசாத பிராணிகளாகவே இருக்க
மேய்ச்சல் தரைகளில்
மேலும் பல குண்டுகள் காத்திருந்தன.


24.12.2008 - குஞ்சுப்பரந்தன், மதாகோவில், 85மாடுகள்.
நன்றி - tamilinsight

Monday, April 6, 2009

விதி பழித்தல் !

விதி.,

எத்தனை முறை

என்னை வீழ்த்தினாலும்

மண்ணோடு மண்ணாய்

மக்கிபோவதற்கு

மரமல்ல - நான்...!

மரமல்ல நான்..,

விதை! -

நான் விதை..!

வேரூன்றி வெடித்தேழுவேன்..!

வினை கிழித்து முளைத்தேழுவேன்..!

விதியையே கொம்பாக்கி படர்வேன்..!

என் விழைவுகளால் விதியை மூடுவேன்..!

என் எண்ணங்களையே

வண்ண மலர்களாக்கி ,

வான் நோக்கி பூத்து சிரிப்பேன் ..!

நான் தரும் நிழலில்

விதியே வந்து இளைப்பாறு

என்பேன்

- நன்றி -

என் அன்பு நண்பர்

தமிழ் ஆர்வலர் திரு . இரமேசு

Sunday, April 5, 2009

வேண்டுவீர்களா மனித தெய்வங்களே.........??



வாழ்வதற்காக நான் படைத்த என் மக்கள்

வாழ்வைத் தொலைத்து வீதியில் வழிதவறி

அடிப்படைத் தேவைக்கே அல்லல் பட,

எனைக் காப்பதாய் நினைத்து நீ

கடிவாலமிட்டுச் சென்ற கட்டிடத்திற்குள்

கதறிக் கொண்டிருக்கிறேன் நான்..

அழத்தெரியாமலே அழும் பிஞ்சுகள்...::::

உயர்ந்தோர் என்பதால் இஸ்ரேலிடம் பாலஸ்தீனமும்......

சிங்களத்திடம் தமிழ் ஈழமும்.....

வீழ்ந்து கொடிருக்கிறது....!!!!எஞ்சி இருப்பது கண்ணீர் மட்டும்தான்...

அதை கொண்டு யாரிடம் போரிட.......,

கடவுளிடமா..? மனிதர்களிடமா...???

எவ்வளவு தேடியும் இவர்களை பார்க்கமுடியவில்லை..!!!

தாழ்ந்தவர்கள் என்பதால் இன்று வீழ்ந்து போகிறோம்.....

வாழ்ந்து பார்க்க ஆசையாய் இருந்தும்..!!!!

உயர்ந்தோரே நாங்கள் அழிந்த பிறகு...

எங்கள் கண்ணீர் கதறலை வரலாறு பேசும்...

உங்கள் குழந்தைகளும் படித்து அழும்.!!

அந்த கண் நீரிலாவது மிருகத்தை கரைத்து...

மனிதனாய் வாருங்கள்....

எங்கள் பிஞ்சுகலாவது மனிதர்களை பார்க்கட்டும்..!!!

அழக்கூட தெரியாமலே அழும்....எங்கள் குழந்தைகளுக்காய்,

ஓரு முறை வேண்டுங்கள்..!!

இருக்க ஆசைப்படும் முடியவில்லை...

இதோ இறக்கிறோம் ........

மரணத்தின் மயக்கத்தில் இருக்கும் எங்கள் .......பிஞ்சுகளுக்காய்,

வேண்டுவீர்களா மனித தெய்வங்களே.........??

நன்றி

அன்பு தோழர்

- திரு.இராஜா சிங்

Saturday, April 4, 2009

தமிழுக்கே இரையாவோம்.ஆம் , தமிழுக்கே இரையாவோம்.!



சோறின்றி , சாரின்றி ,
நீரின்றி , மோரின்றி , நாங்கள்
தவிக்குதல் கேட்கலையோ
தாழ்ந்த தமிழகமே?



பிணந்தின்னிக் கழுகுகள் கூட்டம்.......
போட்டியாய் குண்டு வீசும் விமானக் கூட்டம்....

பிறந்தவுடன் எறிக்கணைக்கு
விருந்தாகும் பிஞ்சுக்குழந்தைகள்.........
பதுங்குகுழிகள் தான் பஞ்சு மெத்தை....
பாதி இறப்புகள் தான் குண்டுவீச்சுக் கணக்கு...
மீதி இறப்புகள் பட்டினியின் கணக்கு........
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
ஆலமரம் போல வளர்ந்த இனம் , இன்று
அக்கினிக்கு இறையாகும் அவலமென்ன?

காடு செதுக்கி , பூமி செதுக்கி
கழனியாக்கி சோறு போட்டோம்.
சொல்லால் இனிமை காட்டி
வில்லால் வீரம் காட்டி
நெல்லால் பசி போக்கி
அல்லல் தீர்த்து வைத்தோம்........!
கல்லணையைக் கட்டினானாம் ,
இமயத்தைக் கொண்டானாம்,
கங்கையைக் கொண்டானாம் ,
கலிங்கத்துப் பரணியுண்டாம்,
முறத்தினில் புலி விரட்டினாளாம் ,
போர் வா மகனே போருக்கு என்று
போர்பரணி பாடினாளாம் ...............!
வீரத்தின் விளைநிலமாம்........
வீரவாஞ்சிநாதனும் பிறந்தானாம்.........
சாவளங் கண்டானாம்....
சாவுக்கு அஞ்சானாம்.....
கண்ணகி இருந்தாளாம்.அவள்
கண்ணசைவில் மதுரை எரிந்ததுவாம்.......
இத்துணை கதைகள் உண்டாம்
எம் வீரத் தமிழினம் பற்றி........
அவையாவும் நாற்பது நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்காக மறக்கப்பட்டதாம்...
இதுவும் வரலாறு...ச்சீ
இதுவா வரலாறு?? அய்யகோ
இதுவா தமிழினம்?
இந்தத் தமிழினத்தைக் காக்கவா எம்
இன்னுயிரை பறிகொடுத்தோம்?இந்தி திணிப்பிற்கே
தாங்கமாட்டா தமிழினம் இன்று
தாங்கவொண்ணா துயரம் கண்டும் சும்மா இருப்பதுவேன்?
அம்மா முடியலையே என்று சிறு குழந்தை
அழுவதை மறந்தது ஏன்?



சோறின்றி , சாரின்றி ,
நீரின்றி , மோரின்றி , நாங்கள்
தவிக்குதல் கேட்கலையோ
தாழ்ந்த தமிழகமே?



தமிழாய்ப் பிறந்து ,
தமிழால் வளர்ந்து ,


தமிழுக்காய்ப் போராடி ,
தமிழுக்கே இரையானோம்..........
தமிழுக்கே இரையாவோம்.........!
ஆம் , தமிழுக்கே இரையாவோம்
.

நன்றி - மதிபாலா பதிப்பகம் -

Thursday, April 2, 2009

அன்புள்ள நண்பர்களுக்கு!

பொருள் அற்ற வாழ்க்கையில்
பொருளை தேடி சில காலமும் ,
அருளை தேடி சில காலமும்
பயணிகின்றோம்!
சில வற்றை ஜிரநிக்கின்றோம் !

இது போலத்தான் ,
நாங்கள் ஜிரனிக்க முடியாத
சில விசியங்களை
எங்கள் பேனாக்கள் வாந்தி எடுத்து விடுகிறது!

எங்கள் அஜீரணங்கள்
உங்கள் சிந்தனைக்கு !

எங்களுக்கு என் இந்த அக்கறை ?
யாருக்கும் இல்லாத அக்கறை ?
என என்னுகிரீர்களா ?

யாம் சில அறியாமையை ,
எங்கள் எழுத்தாமயால்
எடுத்துரைக்க வந்தோம் !




பெரியார் முழக்கம் !

எத்தனை எத்தனை ஆண்டுகள் தொடரும்
இந்த மண்ணில் ‘சாதி’ப்போர்?
எத்தனை ஆண்டுகள் தொடர்ந்தால் என்ன,
பார்ப்பனர் தாமே சாதிப்போர்?
சட்டம் நீதி ஆட்சி எல்லாம்
தர்ப்பைப் பூணூல் சொற்படியே!
பட்டம் பதவி படிப்புகள் எல்லாம்
பார்ப்பா னின்மனு நூற்படியே!
இடஒதுக்கீட்டுக் கேடர்கள் காங்கிரசுத்
தலைமையில் இருந்த எத்தகர்களே!
படமெடுத் தாடும் பாம்பாய் நேரு
பரம்பரை வந்த பார்ப்பனரே!
எல்லாம் தெரிந்தும் நேரு மகான்(!) தான்
இந்தச் செய்தியில் குழிபறித்தார்
கல்வி தராமல் சூத்திர மக்களைக்
காயடித்து விழி பறித்தார்.
நீதி பதியாய் அமர்ந்தால் போதுமா
நிகழ் காலத்தின் அறிவிலையா?
சாதி வாரிக் கணக்கெடுப் பதனைத்
தடுத்தவன் இங்கெவன் தெரியலையா?
ஒதுக்கீட் டால்பிறர் உரிமை கெடுவதை
ஒப்பேன் என்று குதிக்கின்றாய்
இதுவரை கொழுத்தவை எல்லாம் சாதி
எருமைகள் என்பதை மறக்கின்றாய்.
கிழியக் கிழியப் பக்க பக்கமாய்
ஆயிரம் விளக்கம் கிளத்துகிறாய்
வழிய வழியக் கொழுத்துத் தின்னும்
வயிறுகள் பார்த்தும் பிதற்றுகிறாய்.
இடுப்பை ஒடிக்க இப்போது நீ
சாதிக் கணக்கை எடுக்கின்றாய்
படித்து முடித்தவன் எல்லாம் பார்ப்பான்
என்பது தெரிந்தும் நடிக்கின்றாய்.
வாக்குக் கட்சிகள் வீராப் பெல்லாம்
வந்து போகும் தேர்தல்வரை
நோக்கம் முடிந்து கோட்டை சென்றால்
‘நூலோர்’ போல வாழ்க்கை முறை
பிச்சை யல்ல பிறப்புரிமை இது
நிலமே பெயர்ந்திட எழுந்திடுவோம்
செத்தாலும் பகை சாய வைத்து
மண்ணில் விழுந்து உயிர் விடுவோம்.

கத்தியின்றி…… ரத்தமின்றி…… வெட்கமின்றி……

காங்கிரஸ் ஏற்பட்டபிறகுதான்
மக்களுக்குத் தேசத்துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே ஏற்பட்டது.
இப்போது மக்கள் ஒவ்வொருவரும் வாழ வேண்டுமானாலும்……
சிறப்பாக அயோக்கியர்கள் வாழ வேண்டுமானாலும்……
உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக இருந்து வருகிறது.
-தந்தை பெரியார் – 1927.

ஊருக்கு மூணே பேர் இருந்தாலும் இந்தக் காங்கிரஸ் அலப்பரைக்கு மட்டும்
அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
காகிதப்பஞ்சமே வந்துவிடக் கூடிய அளவிற்கு அறிக்கைப் “போர்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
அதன் சர்வ கோஷ்டித் தலைவர்களும். சீமான் – கொளத்தூர் மணி – மணியரசன் கைது……
விடுதலைச் சிறுத்தைகள் பேனர் கிழிப்பு……
பவனில் செருப்படி……
சிபிசிஐடிவிசாரணை……
என அல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது தமிழகம்.
ஆனால் சத்தியமூர்த்தி பவனைப் பொறுத்தவரையில்
இந்த முறை மட்டும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.
இதுவரைக்கும் தங்களது சொந்தக் கட்சியின் தலைவர்களையே வேட்டியை உருவி ஓடவிடுவது…… தங்களது தலைவர்களின் கொடும்பாவிகளை தாங்களே கொளுத்துவது……
சரமாரியாய் செருப்பாலடித்து “முதல்” “மரியாதையை” அளிப்பது
என்பதெல்லாம் தங்களுக்கே உரித்தான பிறப்புரிமை என்றிருந்தவர்களுக்கு ,
மற்றவர்கள் இதில் பங்குக்கு வந்தால் கோபம் வராமல் என்ன செய்யும்?
ஆனால் காவிரியில் கர்நாடகம் நீர் விட மறுக்கும்போதோ…… தலித்துகளுக்கோ, பிற்படுத்தப்பட்டோருக்கோ சமூகநீதி மறுக்கப்படும்போதோ……
தங்களது சகல துவாரங்களையும் பொத்திக் கொண்டிருக்கிற
இந்தப் பேரா(சை)யக் கட்சிக்காரர்கள் “ஈழம்” என்று வாயைத் திறந்தாலே போதும்
எகிறிக்குதித்து வந்துவிடுகிறார்கள்.
அதைப் பார்க்கும்போது இவர்களுக்குத் தலைவர் சோனியா காந்தியா?
அல்லது ராஜபக்சேவா? என்கிற நியாயமான கேள்வி
ஆறறிவு உள்ளவர்கள் எவருக்கும் எழத்தான் செய்யும்.
அதுசரி…… இந்தப் பேராயக் கட்சி இப்போதுதான் இப்படியா……? அல்லது எப்போதும் இப்படியா? என்கிற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டாயம்
இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆக்டேவியன் ஹியூம் என்கிற வெள்ளைக்காரனது கருவில் உருவான இந்தக் காங்கிரஸ் முட்டை “வெள்ளையனே வெளியேறு” என்கிற சரணத்தோடு துவக்கவில்லை தனது “தேசபக்திப்” பாட்டை. “மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் மகாராணியார் நீடூழி வாழ்க” என்றே தனது அன்றாடப் பணிகளை ஆரம்பித்தது. ஆம். இந்திய “சுதந்திரப்” போராட்ட வரலாற்றை அறிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் காங்கிரசின் துரோக வரலாற்றையும் அறிந்து கொண்டால்தான் தற்காலத் தற்குறிகளின் தொடைதட்டல்களை விளங்கிக் கொள்ள முடியும்.
மாவீரன் பகத்சிங்கும் அவனது தோழர்களும் இந்தியாவின் உண்மையான சுதந்திரத்திற்காக
தூக்குக் கயிற்றை முத்தமிட்டு இன்றோடு எழுபத்தி எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டது.
ஆனால் அம்மாவீரன் தூக்கு தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருந்த வேளையில் மகா ஆத்மா காந்தி ஒரு கடிதம் எழுதினார் பிரிட்டிஷ் பிரபு எமர்ஸனுக்கு.
என்னவேன்று தெரியுமா நண்பர்களே……?
“நீங்கள் தூக்கில் போடுவதென்று முடிவு செய்துவிட்டால் கராச்சியில் நடக்க இருக்கும்
காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்னரே அவரை போட்டு விடுவது நல்லது.” என்று.
இன்று காங்கிரசார் தபால்தலை உட்பட இன்னபிற இத்யாதிகளுடன் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் மாவீரன் பகத்சிங் அன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு “தீவிரவாதி”.
அதுவும் கராச்சி மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலேற்றப்பட வேண்டிய “பயங்கரவாதி.”
“தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்காளர் தொகுதிதான் ஓரளவுக்காவது அம்மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற உரிய வழி” என முழங்குகிறார் அம்பேத்கர்.
அதன் தார்மீக நியாயம் புரிந்து 1932 இல் பிரிட்டிஷ் பிரதமரே தீர்ப்பு அளிக்கிறார்
“அம்பேத்கரின் நியாயம் அங்கீகரிக்கப்படுகிறது” என்று. “இது எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திவிடும்” என்று எரவாடா சிறையிலேயே “சாகும்வரை” “உண்ணாவிரதத்தை” அறிவித்து
அம்பேத்கரை அல்லலுக்கு ஆளாக்குகிறார்கள் காந்தியும், காங்கிரசாரும்.
அப்போதுதான் இந்த “உண்ணாநோன்பு” குறித்து கிண்டலடித்து
நீதிக்கட்சியின் நாளேடான திராவிடன் எழுதியது :

“காந்தியார் எதற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தார் என்றால்
இந்திய நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தாழ்த்தப்பட்டு……
ஒடுக்கப்பட்டு…… நாதியற்று…… நசுங்கிக் கிடக்கும் ஏழு கோடி பிணங்களுக்கும்
தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதே காரணமாம் !
அந்தோ இக்காரணத்தை எண்ணும்போதுதான் காந்தியின் ஒரு உயிரை விட
எமது ஏழுகோடி ஏழை மக்களின் ஏழு கோடி உயிர்கள் பெரிதல்ல என்ற எண்ணம்
நமக்குத் தோன்றுகிறது.”
தலித் மக்களின் விடுதலைக்காக சாகும் வரையிலும் போராடிய
மாமனிதன் அம்பேத்கர் அன்றைய கான்கிரசாருக்கு
“இந்து சமூகத்தைக் கூறு போட வந்த குழப்பவாதி”.
இன்றைய கதர்சட்டைகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வார்த்தெடுத்த மேதை.
இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷ்காரர்களுக்கு
கிலி மூட்டிய ஆனானப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போசே
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குள் பட்டபாடும்……
ஆன பிற்பாடு கதர்க்குல்லாக்களிடம் பட்டபாடும்……
பிற்பாடு “உங்கள் சகவாசமே வேண்டாம்…… உங்கள் கதர்க்கொரு கும்பிடு……
உங்கள் காங்கிரசுக்கொரு கும்பிடு……” என்று வெறுப்போடு வெளியேறியதையும்
வரலாறு தனது பக்கங்களில் அழுத்தமாகப் பதித்து வைத்திருக்கிறது.
“சுபாஷ் போஸ் நம்பத் தகுந்தவரே அல்ல என்பதை நான் கவனித்து வந்துள்ளேன். எனினும் காங்கிரசின் அடுத்த தலைவராக வரக்கூடியவர் அவரைத் தவிர வேறு யாருமல்ல.”
இது காந்தி வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதம். –நவம்பர் 1. – 1937.

ஆக அன்றைய காங்கிரசாருக்கு நேதாஜி நம்பத்தகாதவர்.
இன்றைய காங்கிரசாருக்கு நேதாஜி நம்பிக்கை நாயகன்.

சொந்த நாட்டின் விடுதலை வீரர்களுக்கே
“தீவிரவாதி……” , “பயங்கரவாதி……” எனப் பட்டம் சூட்டியவர்கள்……
அண்டை நாட்டின் போராளிகளையா அங்கீகரிக்கப் போகிறார்கள்……?
இது மட்டும் என்றில்லை. சமூக மாற்றங்களுக்கான அடித்தளம் எங்கெங்கெல்லாம் ஆரம்பிக்கப்பட்டதோ…… அங்கெங்கெல்லாம் அதன் அடிக்கல்லை உருவுவதே
அதன் தலையாய “தேசபக்த”ப் பணியாக இருந்திருக்கிறது.
நடைவண்டி பழகும் நாட்களிலேயே பெண்குழந்தைகள் விதவைக் கோலம் பூணும்
கோரம் சகியாமல் கொண்டுவந்த “இளம் வயது விவாக விலக்கு மசோதா”வை……
“பால்ய விவாகமில்லாவிட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை”
சண்டித்தனமாய் எதிர்த்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர்
எம்.கே.ஆச்சாரியார்தான்.

கடந்த நூற்றாண்டின் துவக்க காலங்களிலேயே
தான் நம்பிய கொள்கைக்கு உண்மையாய் கதர் உடுத்தி……
தனது குடும்பத்தவர்களையும் உடுத்த வைத்து……
கள்ளுக்கடை மறியல்களில் ஈடுபட்டு……
வைக்கத்தில் தெருநுழைவுப் போராட்டங்களில் கைதாகி……
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி……
தன் உழைப்பு அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் போனதைப் புரிந்து கொண்டு……
“இனி காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை.” என வெளியேறிய தந்தை பெரியாரையே
ஆப்படித்துப் பார்த்தவர்கள் அல்லவா இந்தக் கதரின் பிதாமகர்கள்?

அவ்வளவு ஏன்……? நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் இரத்தக்கண்ணீர், போர்வாள், தூக்குமேடை
உட்பட பல நாடகங்களுக்குத் தடை விதித்தும்…… 144 தடை உத்திரவு போட்டும்……
நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தும்……சரமாரியாக கல்வீச்சு நடத்தியும்
கருத்துச் சுதந்திரத்தை “நிலைநாட்டிய” கண்ணியவான்கள்தான் இந்த அகிம்சையின் புத்திரர்கள்.

ஆனால், அந்தச் சேற்றிலும் காமராசர் என்கிற செந்தாமரை முளைக்கத்தான் செய்தது.
எந்தக் காங்கிரஸ்காரர்கள் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை மீது ஏறி நின்று
“அகிம்சையை” நிலைநாட்டினார்களோ…… அதே ஆட்கள்
“எம்.ஆர்.ராதா அவர்கள் என்னை எத்தனைதரம் திட்டி இருப்பார் என்று நினைக்கிறீர்கள்.
அவர் திட்டியதற்காக நான் ஒன்றும் வருத்தப் படவில்லை.
அவர் திட்டியதில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்பேன்.
இருந்தால் எடுத்துக் கொள்வேன்.” என்று முழங்கினார் காமராசர்.
தன்னையே விமர்சித்தாலும் மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளித்த காமராசர் எங்கே……?
நியாயமான கருத்துக்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாத
தங்கபாலுக்களும்…… இளங்கோவன்களும் எங்கே……?

எல்லாவற்றுக்கும் மேலாய்…… காங்கிரஸ் நண்பர்களிடம் கேட்பதற்கும் நியாயமான கேள்வி ஒன்றிருக்கிறது. “பொட்டுக்கட்டுதல்” என்கிற பெயரால் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த
பெண்கள் மட்டும் தேவரடியார்களாக சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தபோது
அதைத் தடுக்கக் கொண்டு வந்ததுதான் “தேவதாசி ஒழிப்புச் சட்டம்”.
ஆனால் அச்சட்டம் வந்தால் “எங்கள் பண்பாடு கெட்டுப் போகும்……
எங்கள் கலைகள் அழிந்துவிடும்……”
என்று பெண் இனத்துக்கே எதிராக குரல் கொடுத்தவர்தானே சத்தியமூர்த்தி……
இன்னமும் அவர் பெயரால் உங்கள் “பவன்” இயங்குவது நியாயமா……?
அல்லது…… கடைக்கோடி மனிதனுக்கும் இந்தக் கல்வி போயாக வேண்டும்
என்று வாழ்வின் இறுதிவரை கவலைப்பட்டாரே காமராசர்……
அந்தக் காமராசரின் பெயரால் உங்கள் “பவன்” இயங்குவது நியாயமா……?
யோசியுங்கள்.
ஆனால், அதற்கும் முன் தமிழ் மக்களும் தங்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றிருக்கிறது.
அதுதான் :
கதர்ச்சட்டைக்காரர்கள் இன்று யார் யாரையெல்லாம் தியாகிகள் என்கிறார்களோ
அவர்களெல்லாம் நாளைய துரோகிகள்.
அவர்கள் யார் யாரையெல்லாம் துரோகிகள் என்கிறார்களோ……
அவர்களே நாளைய தியாகிகள்.
அவர்களது அகராதிப்படியே.

நன்றி : “தமிழக அரசியல்” வார இதழ்.

Wednesday, April 1, 2009

தீயினில் எரியாத தீபங்கள் !

சாகும் தருணத்தில் முத்துக்குமரின் வாக்குமூலம்

"வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?"

English Translation of last letter by Muttukumar
"My dear working Tamils...Vannakam. At a time when you are busy getting to work, I am pained that I have to meet you in this way. But there is no other way. My name is Muttukumar. I am a journalist. At present I am working in a newspaper in Chennai.Like you, I too have daily read the news reports and the internet of the daily killings of our fellow Tamils in Eelam. Like you I am also one of the countless Tamils who have been unable to eat or sleep.Senth Thamizh Nadu has given life to those who have come to it, but our blood relations in Eelam are dying. When we raise our voices and call for an end to this killing, the Indian imperial government says neither yes nor no and grows silent. If the Indian government’s war is just, then it should engage in that war openly. Why does it do it in secret and with deceit?..Tamil Eelam is not the need of Tamil Eelam alone, it is the need of Tamil Nadu also... Dear Tamil people, in the struggle against injustice our brothers and children (in Tamil Nadu) have taken up the weapon of the intellect. I have used the weapon of life. You use the weapon of photocopying. Yes, make copies of this pamphlet and distribute it to your friends, relatives, and students and ensure that this support for this struggle becomes greater. Nan'ri."

மாவீரர் யாரோ என்றால் - மரணத்தை வென்றோர்கள்...